ஹரியானா: பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்டில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுழல் ராட்டினத்தில் ஏராளமானோர் விளையாடிக் கொண்டிருந்தபோது, நேற்று மாலை 6 மணி அளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ராட்டினம் முறிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியிலிருந்த காவலர் ஒருவர் உயிரிழந்தது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மேலும், படுகாயங்களுடன் இருந்த 13 பேரை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்ததும் அங்கு வந்த மாவட்ட நிர்வாகத்தினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல்.

இந்த விபத்து தொடர்பாக x தளத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நயாப் சைனி, ‘ ஃபரிதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சூரஜ்குண்ட் மேளாவின் போது ஏற்பட்ட விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், காயமடைந்தவர்களுக்கு உரிய மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.


