இந்த நாட்டில் ஆதிவாசி மக்களும் போராடி நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என ‘வாச்சாத்தி’ ஆவணப் படம் பார்த்த பிறகு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி
வாச்சாத்தி வன்கொடுமை, அதற்காக நடைபெற்ற போராட்டம், போராட்டத்தின் வெற்றி என அனைத்தையும் 40 நிமிடங்களுக்குள்ளாக ஒரு சிறந்த கலைப்படைப்பாக காம்ரேட் டாக்கீஸ் எடுத்துள்ளது. ‘வாச்சாத்தி வன்கொடுமை’ ஆவணப் படத்தைப் பார்த்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆதிவாசி மக்களாலும் அரசாங்கத்தை எதிர்த்து, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இப்படம்.

இதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் அதன் மூலமாக ‘அநீதிகள் நடைபெறுகிற போது பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது மோதி மிதி முகத்தில் உமிழ்’ என்ற பாரதியின் வைர வரிகளுக்கேற்ப மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆதிவாசி மக்களின் போராட்டம் அமைந்தது தெரியவரும். அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற ஒரு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம்.


