பத்துத் தோல்விகளைக் கண்ட பழனிசாமியும், மொத்தத் தோல்வியைச் சந்தித்த மோடியும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.
விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘இவ்வளவு காலம் அதிமுக, பாஜகவின் கிளையாக இருந்தது. இன்று அதிமுக, பாஜகவின் இலையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பத்துத் தோல்விகளைக் கண்ட பழனிசாமியும், மொத்தத் தோல்வியைச் சந்தித்த மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும், தமிழ்நாட்டிற்குள் உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, தமிழ்நாடு ஒருபோதும் உங்கள் கையில் சிக்காது. ஏனென்றால் எங்கள் தலைவர் அடிக்கடி சொல்வது போல, தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.

திருவிழாக் கூட்டத்தில் பிள்ளை பிடிக்கும் கும்பலும், திருட்டு கும்பலும் உள்ளே வருவார்கள். `மிட்டாய், ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கித் தருகிறேன்’ என்று கூறி குழந்தைகளைக் கடத்த பார்ப்பார்கள். இப்போது அதேபோலத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ஈ.டி வழக்கிலிருந்து நான் காப்பாற்றுகிறேன், ஃபெரா வழக்கிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், சம்பந்தி ஒப்பந்தம் எடுத்த வழக்கைத் தீர்த்து வைக்கிறேன் என்று வழக்குகளைக் காட்டி, இன்று ஓர் அடிமைக் கூட்டத்தைப் பாசிஸ்டுகள் சேர்த்திருக்கிறார்கள். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம், ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான். ஏனென்றால், எங்களை வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஒரு தலைவர்’ என்று கூறினார்.


