2025 டிசம்பர் 3-ஆம் தேதி, உச்சநீதிமன்ற பார் கவுன்சில் (SCBA) ஏற்பாடு செய்த “Women Empowerment in Law: Strength, Struggle and Success” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு பெண் வழக்கறிஞர், பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றும் ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு நீதித்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, மொழி பயன்பாட்டைச்சார்ந்து விவாதம் தொடங்கியது.
அதற்கு பதிலளித்த நீதியரசர் நாகரத்னா, இந்தியா பல மொழிகளும் பல கலாச்சாரங்களும் கொண்ட நாடாக இருப்பதால் ஒரே மொழியை கட்டாயப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறினார். மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் அரசியலமைப்பு நீதிமன்றங்களான உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் ஆங்கிலமே உள்ளது என்று கூறியவர்.

மேலும், நீதிபதிகளை மாநிலங்களுக்கு இடையே மாற்றி நியமிக்கும் நடைமுறைக்கும், நாடு முழுவதும் நீதித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் ஆங்கிலம் ஒரு நடுநிலை இணைப்புமொழியாக உள்ளது என்றார். “இந்தி தெரியாததால் தென் இந்தியர்கள் தனிமைப்பட விரும்பவில்லை; மொழி விஷயத்தில் சமநிலை அவசியம்,” என்று நீதியரசர் நாகரத்னா வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள், இந்தியாவின் மாநிலங்களின் மொழி உரிமை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.தற்போது இணையத்தில் மாநில உரிமைகள் பேசுபவர்களால் அவர் பேச்சு வைரலாக்கப்படுகின்றது.




